Showing posts with label மலரும் நினைவுகள். Show all posts
Showing posts with label மலரும் நினைவுகள். Show all posts

Thursday, September 2, 2010

நினைவுகள் தொடருகிறது.....



அன்று முழுவதும் என் நண்பன் பள்ளிக்கு வரவில்லை. மாலை பள்ளி முடிந்ததும், நேராக அவனது வீட்டுக்கு  சென்று பார்த்தேன். வீட்டில் அவனும் அவன்  அம்மாவும் இருந்தார்கள் . மெதுவாக  அவனிடம் சென்று பள்ளிக்கு ஏன் வரவில்லை என்று கேட்டேன்,  அவன் உடனே அழ தொடங்கினான். பதில் ஏதும் சொல்லவில்லை 

அவனது அம்மா பேச தொடங்கினார்கள், " நேற்று மாலை வீட்டுக்கு வந்த உடன் அவனது அப்பா வீட்டு பாடத்தை  எழுதுவதற்கு நோட்டு புக்கை  எடுத்து வர சொன்னார்கள்  , அதை எடுத்த போது  அதனுடன் ஆசிரியரின் கண்ணாடியும் கீழே விழுந்தது. அதை பார்த்த அவனது அப்பா ' இது யாருது ' என்று கேட்டார். அதற்கு அவன் பயத்துடனும் இது தனது தமிழ் ஆசிரியருடையது என்றும் அதற்கு பின்னர் வகுப்பில் நடந்தவற்றையும்  சொல்லி இருக்கிறான் , அதை கேட்ட அவனது அப்பா அவனை அடித்தும், திட்டியும் இருக்கிறார். 

இந்த வயதிலேயே அதுவும் பாடம்  சொல்லித்தரும் ஆசிரியரிடமே திருட தொடங்கி விட்டாயே என்று  கோபத்தில் கத்தி, அவனை தனது சைக்கிளில் ஏற்றி கொண்டு அந்த இரவு நேரத்தில் ஆசிரியர் வீட்டுக்கு சென்றார். தனது தவறை ஒப்புகொள்ள செய்து அவரது கண்ணாடியையும் திருப்பி கொடுத்துவிட செய்தார். அப்பாவிடம் வாங்கிய அடியும், தன்னுடைய குற்ற உணர்வும் அவனை இரவு முழுவதும் புலம்ப செய்தது. இதனால் காய்ச்சல் வந்து பள்ளிக்கு வரவில்லை " என்று கூறி முடித்தார்கள்.

அந்த நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால், முக்கியமாக மாணவன் செய்த தவறுக்கு தனக்கு தண்டனை கொடுத்த அந்த ஆசிரியர் எங்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார். அதற்கு பின்னர் கூடிய அளவிற்கு யாரும் தவறு செய்யாமல் இருந்து கொண்டோம், அப்படியும் சிலர் செய்த தவறுகளையும்  நாங்கள்  காட்டி கொடுத்து விடுவோம். 
  
( பி.கு ) அந்த கண்ணாடியை எடுத்த என் நண்பன் இப்போது காவல் துறையில் பணிபுரிகிறார் !!

**************************************************************************************
'வெற்றி என்பது வேறு எங்கும் இல்லை, தோல்வியில்தான்'

தோல்வியே வெற்றியின் தாரக மந்திரம்.தோல்வியினால் வெறுப்படைந்தால் வாழ்கையில் முன்னேற முடியாது. எனவே தோல்வியை வெற்றியாக்குவதர்க்கு  என்ன வழி உண்டு என்பதை ஆராய்ந்து அடியெடுத்து வைத்தால் வெற்றி நிச்சயம்.

தோல்வி வந்து விட்டதே என்று துக்கபடுவதால் ஒரு பிரயோசனமும்  இல்லை. இன்று நாம் வெற்றி பெற்றவர்களாக போற்றப்படும் ஒவ்வொரு சிறந்த மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றையும்  ஆராய்ந்து பார்த்தால் பல முறை தோற்றவர்களாகவே காணபடுவர். தோல்வி பெற்ற ஒருத்தரால் மட்டுமே முழுமையான வெற்றியை பெற  முடியும்.

எனவே தோல்வியை நேசியுங்கள். வெற்றியும் தோல்வியும் ஒன்று போல் எடுத்துக்கொண்டால்  மட்டுமே வாழ்க்கையை ரசிக்க முடியும். துக்கம், பொறாமை , தோல்வி,  வேதனை, பழிவாங்குதல் அனைத்தையும் நம்  மனதில் இருந்து அகற்றிவிடுங்கள். அப்போது மனதில் தூய  வெளிச்சம் உண்டாகும்.

எப்போதும் எதிரிகளை நேசிக்க கற்றுகொள்ளுங்கள் அவர்கள்தான் நாம் முன்னேறுவதற்கு வழிகாட்டிகள். மகிழ்ச்சியும், புன்னகை புரியும் முகம்  மட்டுமே எதிரியை வீழ்த்தும் சிறந்த ஆயுதங்கள் . உங்களுடன் பணியாற்றும் சக தோழர்களை நேசியுங்கள் அவர்களை மனிதர்களாக மதியுங்கள் , தங்களை சுற்றி சந்தோசம் என்னும்  கோட்டையை கட்டுங்கள், யாராலும் அதை வீழ்த்த முடியாது.                              

தோல்வியை எதிர் கொள்ள நம்மிடம் இருக்க வேண்டியது தன்னம்பிக்கை.  என் வாழ்க்கையில் பல சோதனைகளை எதிர்கொள்ள இந்த தன்னம்பிக்கை மட்டுமே எனக்கு கை கொடுத்தது , இன்றும் கை கொடுத்து கொண்டு இருக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து வாசகங்களும் என்னை  மீண்டும் புதுபித்து கொள்ளவே.....இவை மறுபடியும் எனக்கு புத்துணர்ச்சியை கொடுப்பதை உணரமுடிகிறது.... இவை வெறும் வாசகங்கள் அல்ல , மனதை ஒழுங்கு படுத்தும் மந்திரங்கள்.  

மனம் ஒழுங்கற்று  இருப்பதால் தான் சிறு தோல்வி கூட பெரிய அளவில் மனதை பாதிக்கிறது.....எனவே " கவலைகளையும், தோல்விகளையும் ஒரு சிறு பையில் போட்டு வைத்து விடுங்கள், முக்கியமாக அந்த பையின் அடியில் ஓட்டை இருக்கட்டும் "
அன்புடன் மீண்டும் சந்திப்போம்......., சிந்திப்போம்.....

மலரும் நினைவுகள்



எங்கள் ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் என்ற நகரம்.
எங்கள் ஊரில் மிகவும் பிரசித்திபெற்ற பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அரியும், சிவனும் ஒன்றே என்று உலகுக்கு காட்டியதாக சொல்லப்படும் கோயில் உள்ளது. ஆங்கிலயருக்கு எதிராக முதன்முதலாக போராட்டத்திற்கு குரல்கொடுத்த  பூலித்தேவன் பிறந்த நெற்கட்டும் செவல் என்ற ஊர் அருகில் தான் உள்ளது.  இன்னும் பல சிறப்புகள் கொண்டது தான். இங்கு ஆடி தபசு என்ற திருவிழா மிகவும் விமர்சையாக இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது.  

வீட்டில் இருந்து சுமார் மூன்று   கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே செல்வோம். சில சமயங்களில் அண்ணனின் கருணையால்  சைக்கிள் கிடைக்கும் அப்போதெல்லாம் பள்ளி பருவ நண்பனை பின்னால் ஏற்றிக்கொண்டு    மகிழ்ச்சியோடு செல்வேன் .   மனதில் எந்த சலனமும் இல்லாத அந்த பருவத்தில் நடந்த, என்னை பாதித்த ஒரு நிகழ்ச்சி ...........

அப்போது எட்டாம் வகுப்பில் படித்து கொண்டு இருந்தேன். எங்கள்  தமிழாசிரியர் பாடம் நடத்தும் விதம்  எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.   வழக்கம் போலவே தமிழாசிரியர்
திரு.கோவிந்தன் அவர்களின் கலகலப்பான போதனைகள் நிறைந்த வகுப்பு நடந்துகொண்டு இருந்தது (அவர் எங்களுக்கு பாடம்  நடத்தும் விதம, எப்போது தமிழ் வகுப்பு வரும் என்று எங்கள் எல்லாருக்கும்   ஒரு எதிர் பார்ப்பு இருக்கும் )    பாடம் நடத்திகொண்டிருக்கும்  நேரத்தில் தலைமையாசிரியர் அழைத்ததாக  பியூன் அண்ணன் தமிழ் ஆசிரியரிடம் தகவல் கூறி சென்றார்.  
                            
தமிழாசிரியரும் தனது மூக்கு கண்ணாடியை கழட்டி மேசை  மீது வைத்துவிட்டு தலைமையாசிரியரை பார்க்க  சென்றார். அந்த நேரத்தில் என் வகுப்பு சக நண்பன் ஒருவன் அவரது மூக்கு கண்ணாடியை எடுத்து ஒழித்து  வைத்துவிட்டான்.

சிறிதுநேரத்தில் தமிழாசிரியர் வந்து பாடம்  நடத்த ஆரம்பித்தார். பலகையில் ஏதோ  எழுதுவதற்காக தனது மூக்கு கண்ணாடியை தேடினார்,கண்ணாடி அங்கு இல்லை...  கண்ணாடியை மாணவர்களில் யாராவதுதான் எடுத்திருக்கவேண்டும் என்று நினைத்து   வகுப்பில் உள்ள அனைவரையும் எழுந்து நிற்க  செய்து, இன்னும்  ஐந்து  நிமிடங்களில் எடுத்தவர்கள் கொடுத்துவிடுங்கள் இல்லை என்றால் தக்க தண்டனை கிடைக்கும் என்று எச்சரித்தார். சக நண்பனை யாரும் காட்டிகொடுக்க முன்வரவில்லை .அவனும் குற்றத்தை ஒத்துக்கொள்ளவில்லை.
      
  சிறிது நேரத்தில் தமிழாசிரியர் மூங்கில் பிரம்பை கையில் எடுத்து தன்னுடைய   இன்னொரு  கையில் ஓங்கி அடித்து தனக்கு தானே தன்டனை கொடுத்துகொண்டார் . அப்போதும் அந்த குறும்புகார தோழன் உண்மையை சொல்லவில்லை, கண்ணாடியை மறைத்தே விட்டான்............. 

மறுநாள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றேன். நேரம் கரைந்து கொண்டிருந்தது, ஆனால் அந்த மாணவனை மட்டும் காணவில்லை ................... ?!

பள்ளி பருவ  நினைவுகள் தொடரும்...